Wednesday 23 August 2017

களவு போன கனவுகள் - 03



அருமை வளநாடே !
ஆற்றல்சார் அருமைந்தர் வாழ்ந்திருந்த
அருமை வளநாடே ! உன்
அழகனைத்தும் இன்றேனோ
அடகு வைக்கப் பட்டனவே !
சுதந்திரமாய் தொழில் புரிந்து
சோம்பலின்றி வாழ்ந்திருந்த
மக்களெங்கே ?
மலைபோன்ற மனங்களிங்கு
ஏனின்று
மடுவாகி மாற்றுருக்
கொண்டனவோ ?

ஆத்திரங்களின்றி
அழகாய் தொழில் புரிந்த நின்மக்கள்,
அதிகார வர்க்கத்தின்
அடக்குமுறை ஆட்சிக்கு அடிபணிந்து,
ஏனின்று,
‘அடிமைச் சிறுமதியில்’
அல்லல் படவேண்டும் ?
பொன் கொழித்து வந்தவுந்தன் மடியினிலே
ஏனின்று
மண்கூடத் தன் மமதையிழந்து நிற்கிறது ?
நாளின் நிழலுருவை
நாளும் காட்டிவந்த
நல்லாற்றுக் கின்றிங்கே அழகில்லை !
பாலைவனம் போலே
பாழாகி விட்ட உன் நிலத்தினிலே
பல்வேறு விதமான
ஏக்கக் குரல்களின் எதிரொலிகள் !
நெல் வளர்ந்து நீர்கட்டி
நின்ற விடமெல்லாம் கோரைப்
புல்வெளியாய் மாறிவிட்ட படியாலோ
பாவம் உன்மக்கள்
படியிறங்கிச் செல்கின்றார் ?

தனிப்பட்டோர் கரத்தினிலே
தனம் சேர்ந்த காரணத்தால்,
தாழ்வுற்ற நின்மக்கள்
தளர்வுற்றுத் தவிக்கின்றார் !
’இளவரசு’ வல்லரசாய் மாறும்!
பின் மறையும் ! – எனில்
இத்தகைய
உழைப்பாளர் கூட்டம் இனி
உருவாக முடியாது !
பதவியிலே பற்றற்று மக்கள்
வாழ்ந்திருந்த காலமொன்று உண்டு !
உழைப்புக் கேற்றதொரு
ஊதியம் கைக்கொண்டு
உண்மைக்குப் புறம்பின்றி
வாழ்ந்திருந்தான் மனிதன் !

அன்று ஆசையில்லை – அதனால்
அழிவும் இல்லை !
அன்று
அறியாமை நிலைத்தாலும்
ஆரோக்கியம் துணையுண்டு !
அளவற்ற பொருளில்லை !
ஆனாலும்
மனம் வளம்கண்டு
வாழ்வாங்கு வாழ்ந்ததனால்
வளர்ச்சி யுண்டு !

காலம் மாறியது !
காசுபணம் சேர்ப்பதிலே
கருத்தும் கூடியது !
வியாபாரம் பெருகியதால்
‘வேண்டாமை’ யென்றொன்றி
வேண்டும் பொருளனைத்தும்
விளைவித்து
வினையுற்றான் மனிதன் !
தேவைகள் பெருகியது !
தேடும் வழிகளதன் தன்மையதோ
குறுகியது !
ஆடம்பரம் சேர
அன்புவழி மாறியது !

அருமை வளநாடே !
இனிய பொழுதனைத்தும்
இத்தலத்தில் எமக்களித்த தாயே !
இன்று
இது என்ன கொடுமை ?
பசுமை நிறைந்திருந்த பாதையெலாம்
பாழ்வெளியாய் மாறிவிட்ட பாதகமேன் ?

கடமைவழி சென்றேன் !
காலம் பல கடந்து,
கனவு நிறை வேறுமெனக்
கால்கள் இழுத்த வழியிங்கு வந்தேன் !
அந்தோ !–
என் கனவுகள் அனைத்துமே
களவுபோய் விட்டனவே !

இலவைக் காத்திருந்த
இந்தக் கிளிகாண – இன்னும்
என்னென்ன காட்சிகள்
இங்குண்டோ ?

கவலைத் தோட்டத்தில்
கடவுள் எனக்களித்த
கனிகள் பல உண்டேன் !
தொல்லை தரும்காலம் !
துவண்டு மனம் வேகும் !
மனம் வெந்த போதெல்லாம்
சொந்த நாடதனின்
சொர்க்க நினைவுகளில்
சுகங்கள் கண்டுவந்தேன் !
இன்று,
வெந்த புண்ணதனில் 
வேல்பாய்ச்சி விட்டாயே !
வேட்டையாடும் வீணர்கள்
விரட்டுகின்ற முயலொன்று
வீழ்ந்திறக்கும் வேளையிலே
வீடடையும் நிலைபோலே,
அனுபவத்தின் அளப்பறிய பாடங்களை
அருமைச் சோதரர்க்கு அளிக்க எண்ணி
ஆய்ந்தோய்ந்த காலத்தில்
ஓடி வந்தேன் !
கடற்கரையின் ஈரமணலில்
கால் வரைந்த ஓவியமாய்,
கலைந்து விட்டனவே கனவுகள் !
வாழ்வில் நான் கண்டுவிட்ட
வசந்தங்கள் எத்தனை !!
வசந்தங்கள் மாறி
வாடைவந் தடைகையிலே
வாழ்வின் பயன்காண
வளநாட்டை நாடிவந்தேன் !
கடமைகள் முடிகையில்தான்
கடன்பட்ட நெஞ்சுக்கோர் சாந்தி !
சொந்த நிலத்தினிலே
உழைத்துவந்த உன் மைந்தன்
சோர்வைக் கண்டதில்லை !
வாழ்க்கை அவனுக்கு
என்றும் வசந்தம்தான் !
அதிகார விரட்டலுக்கு
அடிபணியும் நிலை
அவனென்றும் அறியாதது !
அனைத்து வழிகளுமே
அவனது வழிகள்தான் !
ஆக்கவும் அவனேதான் !
அழிக்கவும் அவனேதான் !
சொர்க்கங்கள் சொந்தக்
கையாலே உருவாகும் !


இக்குறுங் கவிதைத் தொடர் கவிஞர் பாலாஜி ஐயா அவர்களின் படைப்பாகும்.
                                                                                           
                                                                                                                   கனவுகள் தொடரும்....


No comments:

Post a Comment

Popular Posts