களவு போன கனவுகள்
வளமை கொழிக்கின்ற
வளநாடு !
உழைப்பே உயர்வென்னும்
உண்மைக் கொள்கையிலே
உழைத்து வளம் பெருக்கி,
உள்ளம் மகிழ்வெய்த
உதவும் மனம்கொண்டு,
உருக்கும் நோயின்றி,
வாழ்வாங்கு வாழுகின்ற,
வள மைந்தர் வாழுகின்ற,
வளமை கொழிக்கின்ற
வளநாடு !
வசந்தம் வந்தாலும்,
வாடைக்குப் பின்
நாடிவரும்
கோடை வந்தாலும்,
அது
விரைவில் விலகாது !
என் இளமையின்
இருக்கைகள் !
இதயம் மலர்ந்து
இறகுகள்விரித்தே நான்
எங்கும் பறந்து சென்ற
இனிமைக் காலங்கள் !
இனிமேல் வாராத
இளமைக் காலங்கள் !
பச்சைப் படர் விரித்த
பசுமைப் புல்வெளியில்
எத்தனை முறைகள் நான்
இயைந்து
நடந்திருப்பேன் !
எத்தனை கவிதைகள்
எழுதி
மகிழ்ந்திருப்பேன் !
அழகுப் பொழிலோரம் !
அருமைச் சூழலது !
ஆங்கே-
உயர்ந்து நின்ற
குன்றதுவும்,
குன்றின்மேல் குடிகொண்ட
கோயிலதும்,
கோலக் கிளிகள்மிகு
சோலையதும்,
சோலைக் கடுத்திருந்த
ஆலையதும்…………… !
இன்னும் ஏடறியா எத்தனையோ
காட்சிகளும்,
எந்தன் கண்களிலே
நிழற்படமாய் இன்று
நிலவி வரும் !
மாலை வேளையிலே, மாஞ்சோலை நிழலினிலே
மயக்கம் குடிகொண்ட
விழிகளினோர் விளையாட்டில்,
தமைமறந்தே நிற்கின்ற
காதலர்கள் !
அவர்தம்
விழிவீச்சில்
சிந்துகின்ற
சிரிப்புச் சிதறல்கள்
!
இளமையின் விளையாட்டை
ஒளிந்திருந்தே
நோக்கும்
முதுகெலும்பற்ற சில
முதுமைகள் !
இன்னும்
ஏடறியா எத்தனையோ காட்சிகளும்
எந்தன் கண்களிலே
நிழற்படமாய் இன்று நிலவிவரும் !
ஆம் !
இவை நிழலாகி விட்டசில
நிஜங்களின் முன்னுருவம் !
கனவுகள் தொடரும்....
இக்குறுங் கவிதைத் தொடர் கவிஞர் பாலாஜி ஐயா அவர்களின் படைப்பாகும்.
No comments:
Post a Comment