Thursday 14 September 2017

களவு போன கனவுகள் - 06




ஆங்கே
வேளாளர் தெரு தாண்டி
வேதியர் தெருவதனின்
கோடியிலே,
அன்பான ஆசிரியர்
வாழ்ந்திருந்தார் !
இரைச்சல் மிகுந்த தன்
இல்லதினோர் மூலையில்தான்
இவர்
தம் மாணாக்கர் படிக்கப்
பள்ளியொன்று நடத்தி வந்தார் !
பார்வைக்குப் பயம் தோற்றும் கண்கள் ;
படிப்பறிவைப் பறைசாற்றும்
பரந்த நெற்றி !
கண்டிப்பு மிகுந்திருந்த அந்தக்
கண்களில்தான்
கருணையும் கடலாகப் பொங்கிவரும் !
அடித்து அழவைக்கும் அதேகரங்கள் தாம்
அரவணைத்து அன்பூட்டும் !
அனைத்து மாணவரும் ஆசானைப்
புரிந்தே நடந்தனர் ! போற்றினர் !
சிரிப்புவெடி உதிர்கின்ற அந்த
வாயிருந்து தான்
சிந்தனைத் தீப்பொறி பிறக்கும் !
கணக்கெழுதப் பாங்காய் கற்பிப்பார் !
கால நிலைகளுக்குக் கட்டியம் கூறிடுவார் !
கவியெழுதிப் பொருள்கூறி மகிழ்விப்பார் !
உலகறிவு ஒருசேர இணைந்திருக்கும் நிலைகண்டு
அவ்வெளிய மக்கள்,
’அத்தனை சிறிய தலைக்குள்ளில்
இத்தனை அரும்பொருட் செறிவா ‘
என்று
அன்றடைந்த வியப்புக்கு அளவில்லை !
ஆனால்
அவரது அளவிறந்த புகழும்
அந்த வெற்றிப் பெருமிதமும் இன்று
வெறுமைப் புயலுக்குள் சிக்கியதே !
கடந்த காலம் கடந்ததுதான் !
கல்விமான் வாழ்ந்திருந்த கல்விக்கூடம்
இன்று வெறும்
கற்கூடமாகவே இருக்கிறது !
மூளை செறிந்திருந்த இடத்திலின்று
முட்புதர் தான் செறிந்திருக்கிறது !
ராகம் பாடிவந்த குயில்கூட்டம்
குறை கொண்டு
சோகம் பாடி அழுகிறது !
அன்பு சிரித்து அகமகிழ்ந்த
இடத்திலின்று
ஆணவம் அரசாளுகிறது !

கற்பனைச் சிறகை இன்னும்
சற்றே விரித்துப்
பின்னோக்கிப் பறக்கின்றேன் !
வெண் திரைக் கடலிடையே
விளங்கும் தீவெனவே
விரிந்த புல்வெளியின்
இடையினிலே,
கண் கவரும் கட்டிடம்
ஒன்றுண்டு !
செவிக்குணவு கொண்டாலும்
இலையென்று சொன்னாலும்
வேண்டுபவர்
வயிற்றுக்கு ஈயுமொரு
சிற்றுண்டிச் சாலையது !
வெண்மைச் சுவர் முழுதும்
விரிந்த சித்திரங்கள் !
கதவுக்குப் பின்னாலோர்
காலக் காட்டி !
மணியடிக்கும் போதெல்லாம் அதிலிருந்தோர்
மணிப்புறா புறத்தெட்டி நமை விளிக்கும் !
மேசைப் புறத்தெல்லாம் விழியீர்க்கும் விரிப்புகள் !
மின்விளக்கின் இன்னொளி நம் மனமீர்க்கும்!
சுற்றுப் புறமெங்கும் சோலைபோல் பூஞ்செடிகள் !
மாலை நேரத்தின் மங்கியதோர் நிலவொளியில்
பானங்கள் குடித்தும் பலகாரம் புசித்தும்
இன்புறுவர் எல்லோரும் இவ்விடத்தில் !
நாளெல்லாம் உழைத்துப் பாடுபடும் மக்கள்
இங்கே கூடித்தான்
களிப்பெய்திக் கவலை மறப்பர் !
இனியிந்த இயக்கங்கட் கிடமில்லை !

இன்பத்தின் இருப்பிடமாய்
இருந்துவந்த என் கிராமம்
இனிமை சீர்குலைந்து
கிடப்பதனைக் காண்கையிலே,
இதயம் இயங்க மறுக்கிறதே !

ஆம்!
எனக்கிந்த எளிமையான இன்பங்கள்
இனியோர் முறைகிடைக்கப்
போவதில்லை !
இயற்கை ஈந்துவந்த
ஆத்மார்த்த மான சில
சொர்க்க போகங்கள் இன்று
சோக கீதங்கள்
ஆகிவிட்டனவே !
பகட்டான இன்பங்கள்
இன்பங்களா என்று
என் இதயம் கேட்கிறதே !
இதற்கென்ன விடை சொல்வேன் !!

---கி. பாலாஜி  

இக்குறுங் கவிதைத் தொடர் கவிஞர் பாலாஜி ஐயா அவர்களின் படைப்பாகும்.
கனவுகள் முற்றும்!

No comments:

Post a Comment

Popular Posts