பூஞ்சோலை
சிரித்திருந்த புழலோரம் ,,,,
இன்று
புதர்க்
காடாய் மாறிவிட்ட கோலம் !
பூஞ்சோலைக்
கருகிருந்த குடிலிதுதான் !
இதில்தான்
பூப்போன்ற
மனம்கொண்ட பாதிரியார் ஒருவர்
வசித்து
வந்தார் ! – அவர்
பாவத்தின்
சுமைகொண்ட
மக்களது
மனம் தேற
மந்திரங்கள்
சொல்லியவர் !
அவர்
வீட்டுப்
படியேறி
வந்துவிட்டுப்
பரிகாரம்
தேடிக்கொண்ட
பக்தர்கள்
எத்தனை பேர் !
நலிவுகளின்
பிறப்பிடமாம்
நகரத்தை
விட்டிங்கே வந்து
நன்மொழிகள் சொல்லிநின்ற நல்ல மனம் !
பணத்திற்காய்
பச்சோந்தி வேடமவர்
போட்டதில்லை
!
பாழுங்
கடுஞ்சொற்கள் சொன்னதில்லை !
அன்பென்னும்
ஆன்மா
வாழ்ந்துவந்த
வீடு !- அவர்
அனைவருக்கும்
பொதுச் சொத்து !
அன்றாடம்
பிச்சைக்கு
வருகின்ற கிழவன்தான்
அவரது
நிரந்தர
விருந்தாளி !
காசிருந்த
காலத்தில்
கண்திறக்க
மறந்திருந்த கயவர்கள்,
காலம்
மாறியதும்
மமதை
மறந்தவர்கள்,
தாய்நாட்டுத்
திருப்பணியில்
தன்
அங்கம் இழந்துநின்ற
போர்வீரன், - இன்ன பலர்
தம்
காயங்கள் கலைய,
கவலைகள்
மறக்க,
தேடிவந்தது
இந்த
தேவதூதனின்
திருவடியைத் தான் !
துணை தேடி
வந்தவரின்
தகுதி, தரம் ஒன்றும் பொருட்டின்றி
,
அன்பாய்
ஒரு வார்த்தை,
பரிவாய்
ஒரு பார்வை ,
நலியும்
உடல்தேற நல்லுணவு ,
அனைத்தும்
அளித்துத்
தருமத்தின்
பெயர்காத்த
பேரறிஞர்
!
செய்பாவ
முணர்ந்துவிட்ட சீடர்களின்
சிறுதுன்பம்
தீர்ப்பதுவே இவர்கடமை !
தாய்ப்பறவை
குஞ்சுகளைச்
சரியான
முறையினிலே
பறக்கச்
செயும்வரையில்
பரிதவிப்
பதுபோலே,
அடுத்துள்ளோர்
நலம்வேண்டி
அனவரதம்
தேவனிடம்
முறையிட்டார்
!
பாதகம்
செய்துவந்த பாழ்மனங்கள்
தேவனிடம்
பாவமன்னிப்புப்
பெறும்வரையில்
இவர்
அனலிட்ட
மெழுகாக,
அலையிட்ட
துரும்பாகத்
துடித்து
வருந்திடுவார் ;
துயர்
தீர்க்கச் சென்றிடுவார் !
மேகங்கள்
சூழ்ந்தாலும் மேருமலை உச்சியது
தன் தனித்
தன்மையிழக்காமல்
நிற்பது
போல்,
பூவுலகத்
துயரங்கள் சூழ்ந்தாலும்
அன்னாரின்
புத்தியென்றும்
புன்மைகள்
சேராத
தேவனவன்
திருப்பாதம் தனிலேதான்
நிலைத்திருக்கும்
!
மாதாகோயிலதன்
மேன்மை அனத்தையுமே
மணியான
வார்த்தைகளால் உயர்த்திட்டார் !
நேர்மை
எனும் நெறியை
நேற்றைய
குழந்தைவரை போதித்தார் !
மழலைகள்
அவர்மூலம் கற்றுவிட்ட வேதத்தைக்
கடைக்காலம்
வரையினிலே மறக்காமல்
மனங்கொள்ளும்
வகையினிலே போதித்தார் !
அவரது
சிரிப்பினிலே
அன்புத்
தாயின் அரவணைப் பைத்தான்
கண்டனர்
அனைவருமே !
அவர்களுக்காகத்தான்
அவர் வாழ்ந்தார் ;
அவர்
சிரித்தார் ; அல்லும் பகலும் பிரார்த்தித்தார் !
தோத்திரங்கள்
சொல்லி
அவர்
துயர்தீர்க்க முயற்சித்தார் !
சிங்கம்
வாழ்ந்திருந்த குகையின்று
சிறுநரியின்
உறைவிடமாய்
ஆனதென்ன
கொடுமை !
இக்குறுங் கவிதைத் தொடர் கவிஞர் பாலாஜி ஐயா அவர்களின் படைப்பாகும்.
கனவுகள் தொடரும்....
No comments:
Post a Comment