Sunday 17 September 2017

அன்புடன் வாழ்த்துகிறேன்...

கொஞ்சிப் பேசி
கோபியரை மயக்கி
கோகுலத்தில் வசிக்கும்
கிருஷ்ணன்போல் அவள்

சிரிப்பில் மயக்கி
சிந்தனையை குருடாக்கி
சிங்கார அழகில்
சிலிர்க்கச் செய்வாள்

தவழ்ந்து வந்து
தாவி எறி
மனதில் புகுந்து
மாயாஜாலம் காட்டுவாள்

மழலை மொழியில்
மாமாயென்று அழைத்து
இரு பல் அழகில்
இன்புற்று சிரிப்பாள்



பார்த்துச் சென்றால்
பாரை மறக்கச் செய்வாள்
காணாமல் சென்றால்
கண்ணீரால் அழைப்பாள்

கண்சிமிட்டி மகிழ்ந்து
கட்டி அணைத்து
காலத்தை மறக்கடித்து
கவலையை எரித்திடுவாள்

மாரோடு சாய்ந்து
மனதை வருடி
இதயத்தினுள் சிம்மாசனமிட்டு
ஏகமாய் வியாபிப்பாள்

மடியில் புரண்டு
மொட்டு விரலால்
நெஞ்சைப் பிளந்து
நெகிழச் செய்வாள்

அழுது வடிவாள்
அதிகாரம் செய்வாள்
அன்பை ஊட்டுவாள் - இறுதியில்
அம்மாவாய் மாற்றுவாள்

துவாரகையில் வசித்த
கிருஷ்ணன் இன்று
துவாரகா வடிவில்
முதலாம் அகவையை தொடுகிறாள்
அன்புடன் வாழ்த்தி மகிழ்கிறேன்

- இக்கவிதை கவிஞர் சதீஷ் விவேகா⁠⁠⁠⁠ அவர்களின் படைப்பாகும் -

#SATHISHVIVEKA #POEM #TAMILPOEM #SIGARAMCO

No comments:

Post a Comment

Popular Posts