Sunday 11 February 2018

முதலாவது உலகத் தமிழ் மரபு மாநாடு - 2018 - விருந்தினர் பதிவு

உலகத்தமிழ் மரபு மாநாடு எதிர்வரும் மார்ச் 01 மற்றும் 02 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டிலுள்ள நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் எஸ்.எஸ்.எம் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது . பல்வேறு உலக நாடுகளிலிருந்து அறிஞர்கள் பங்குபெற உள்ளனர் . உலகளாவிய அமைப்பான தமிழ் மரபு அறக்கட்டளையும் எஸ்.எஸ்.எம் தமிழ் மரபு மையமும், தமிழக அரசு நிறுவனமான உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும் இணைந்து “தமிழும் தமிழர் தம்வாழ்வியலும்“ என்ற பொருண்மையில் நடத்தும் இந்த மாநாடு உலக அளவில் நடைபெறும் முதல் உலகத் மரபு மாநாடு ஆகும்.

தமிழின் வாழ்வியல் கூறுகளையும், தமிழர் வாழ்வியல் நெறிகளையும் உலக அளவில் கொண்டு செல்வதற்காக நடத்தப்படும் இந்த மாநாட்டில் தொல்லியல், பண்பாட்டியல், மொழியியல், சமூகவியல் மற்றும் இறையியல் ஆகிய தலைப்புகளில் அமர்வுகள் நடைபெற உள்ளன. இந்த தலைப்புகளில் தமிழின் சிறப்புகள் குறித்து பல்வேறு அறிஞர் பெருமக்கள் உரை நிகழ்த்த உள்ளனர்.



மாநாட்டில் தமிழ் வளர்ச்சிக்குத் தேவையான பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு அது மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் கரங்களில் மாண்புமிகு தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் அவர்கள் முன்னிலையில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், சிறப்பு விருந்தினர்கள், தமிழ் அறிஞர் பெருமக்கள் ஆகியோர் வழிமொழிய வழங்கப்பட உள்ளது.

விழாவில் தமிழக துணைமுதல்வர் மாண்புமிகு ஒ.பன்னீர் செல்வம், தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு செங்கோட்டையன், மின்சாரத்துறை அமைச்சர் மாண்புமிகு தங்கமணி, தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் மாண்புமிகு மா.பா. பாண்டியராஜன், சுற்றுப்புறச் சூழல் துறை அமைச்சர் மாண்புமிகு கருப்பண்ணன், சமூகநலத்துறை அமைச்சர் மாண்புமிகு சரோஜா ஆகியோர்களும் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்கள்.

மாநாட்டின் தொடக்க நிகழ்வாக வரும் மார்ச் 01 (01.03.2018) அன்று காலை 10 மணியளவில் எஸ்.எஸ்.எம். கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் வி.ஜி.பி உலகத் தமிழ் பண்பாட்டு மையத்தின் தலைவரும் தொழிலதிபருமான முனைவர் வி.ஜி.பி சந்தோசம் அவர்களால் வழங்கப்படும் தெய்வப் புலவர் திருவள்ளுவர் சிலையினை மாண்புமிகு தமிழக முதல்வர் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், சிறப்பு விருந்தினர்கள், கௌரவ விருந்தினர்கள், தமிழ் அறிஞர் பெருமக்கள் முன்னிலையில் திறந்து வைக்கிறார். தொடர்ந்து மூலிகைக் கண்காட்சியையும் இலவச சித்த மருத்துவ முகாமையும் திறந்து வைக்கிறார்.

மாநாட்டு சிறப்பு மலரினையும் மூன்று தொகுதிகள் அடங்கிய ஆய்வுக் கோவை புத்தகங்களையும் மாண்புமிகு தமிழக முதல்வர் வெளியிட்டு சிறப்புரை ஆற்றுகிறார்.

கௌரவ விருந்தினராக ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு செல்வகுமார் சின்னையன், நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு சுந்தரம், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழக துணைவேந்தர் முனைவர்.பாஸ்கரன், வி.ஜி.பி. உலகத் தமிழ் பண்பாட்டு அமைப்பின் தலைவரும் தொழில் அதிபருமான வி.ஜி.பி. சந்தோசம், வேலூர் வி.ஐ.டி பல்கலைக் கழக வேந்தர் முனைவர். விஸ்வநாதன் , மற்றும் ஈரோடு , நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்கிறார்கள்.




தமிழகத்தின் மிகப்பெரிய தமிழ் ஆளுமைகள் பலரும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர். மேனாள் தமிழக சட்டப் பேரவைத் தலைவரும் பத்திரிக்கை ஆசிரியருமான முனைவர். செ.கு.தமிழரசன், திருமதி ஜெயந்தி கண்ணப்பன், குறள் மலை திரு ரவிகுமார், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் முனைவர் விஜயராகவன், திருமூலர் இருக்கை நிறுவுனர் முனைவர் மகாலட்சுமி, சிந்தனைக் கவிஞர் கவிதாசன், மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் திரு. ஸ்டாலின் குணசேகரன், கோவை கௌமார மடாலய பீடாதிபதி, பேரூர் ஆதீனம், ஜெகத் கஸ்பர் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்களும் வெளிநாட்டைச் சார்ந்த பல்வேறு முக்கியப் பேச்சாளர்களும் ஆய்வாளர்களும் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்த உள்ளார்கள்.

நிறைவு விழாவில் உயர்நீதிமன்ற நீதிபதி நீதியரசர் மகாதேவன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்.

மாநாட்டில் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், மியான்மர், ஜெர்மனி, தென் ஆபிரிக்கா, இந்தோனேசியா, மொரீசியஸ், ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் சீன நாட்டிலிருந்தும் புலம்பெயர்ந்த தமிழ் அறிஞர்களும், பல்வேறு நாடுகளைச் சார்ந்த அமைச்சர் பெருமக்களும் கலந்து கொள்ள உள்ளனர்.

மார்ச் 1, 2, 3 ஆகிய மூன்று நாட்களும் இலவச சித்த வைத்திய முகாமும், மூலிகைக் கண்காட்சியும், புத்தகக் கண்காட்சியும் நடைபெற உள்ளது. 200க்கும் மேற்பட்ட பாரம்பரிய சித்த வைத்தியர்கள் கலந்துகொள்ள உள்ளனர். சித்த வைத்திய முகாம் மற்றும் மூலிகைக் கண்காட்சிக்கு மாநில சித்த மருத்துவ சங்கத் தலைவர் மருத்துவர் கே.எம். ராஜம் அவர்களும், மாநில சித்த மருத்துவ சங்க ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் அருள் நாகலிங்கம் ஆகியோரும் செயலாற்றி வருகின்றனர்.

மார்ச் 3 ம் தேதி நம்ம குமாரபாளையம் அமைப்பின் சார்பாக தமிழரின் பாரம்பரிய வீர விளையாட்டான ஏறு தழுவுதல் (ஜல்லிக்கட்டு) மிகச் சிறந்த முறையில் நடைபெற உள்ளது.

மாநாட்டிற்காக வருகை தரும் ஆய்வாளர்களுக்கு தமிழகத்தின் மிக முக்கிய தொன்மை வாய்ந்த நகரங்களை சுற்றிப் பார்க்க சுற்றுலா ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழமுதம் பருக,
அனைவரும் வருக!

நன்றி!

முனைவர். மதிவாணன்
தலைவர்
எஸ்.எஸ்.எம் கல்வி நிறுவனங்கள்
குமாரபாளையம்
நாமக்கல் மாவட்டம்
தமிழ்நாடு.

முதலாவது உலகத் தமிழ் மரபு மாநாடு - 2018 - விருந்தினர் பதிவு - சிகரம் 

#சிகரம் #உலகத்தமிழ்மரபுமாநாடு2018 #SIGARAM #SIGARAMCO #WTHC2018 
#WORLDTAMILHERITAGECONFERENCE2018   

No comments:

Post a Comment

Popular Posts