உள்ளூராட்சிமன்றத் தேர்தல் இன்று சனிக்கிழமை காலை 7 மணிமுதல் மாலை 4 மணிவரை நடைபெறவுள்ளது. இந்நிலையில் இம்முறை உள்ளூராட்சிமன்றத் தேர்தல் புதிய முறையில் நடைபெறவுள்ளதால் தேர்தலில் எவ்வாறு வாக்களிப்பது என்ற தெளிவை வாக்காளர்கள் பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
கடந்த காலங்களில் தேர்தல் செயலகமும் சிவில் நிறுவனங்களும் ஊடக நிறுவனங்களும் புதிய தேர்தல் முறைமையில் வாக்களிப்பது எவ்வாறு என்ற தெளிவுபடுத்தலை போதுமான அளவு வழங்கியிருந்தன. வாக்காளர்கள் இதுதொடர்பில் ஒரு சரியான தெளிவைப் பெற்றுக்கொள்வது அவசியமாகும். இம்முறை உள்ளூராட்சி தேர்தலானது வட்டார மற்றும் விகிதாசார முறைமைகளைக் கொண்ட கலப்பு முறைமையில் நடைபெறவுள்ளது.
வட்டார முறைமையில் 60 வீதமான உறுப்பினர்களும், விகிதாசார முறையில் 40 வீதமான உறுப்பினர்களும் இந்தத் தேர்தல் மூலம் உள்ளூராட்சிமன்றங்களுக்கு தெரிவுசெய்யப்படவுள்ளனர்.
இம்முறை புதிய தேர்தல் முறைமையில் விருப்பு வாக்கு முறைமை உள்ளடக்கப்படவில்லை. மாறாக வாக்காளர்கள் வாக்களிப்பு நிலையத்தில் வழங்கப்படும் வாக்குச்சீட்டில் கட்சிகளின் பெயர்களும் சுயேச்சைக்குழுக்களின் இலக்கங்களும் அதன் சின்னங்களும் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கான இடைவெளியும் காணப்படும்.
வாக்கு சீட்டைப் பெற்றுக்கொள்ளும் வாக்காளர்கள் தமக்கு பிடித்த கட்சி, அல்லது சுயேச்சைக்குழுக்களின் சின்னங்களுக்கு நேராக வழங்கப்பட்டுள்ள இடைவெளியில் தமது புள்ளடியை இட்டு வாக்களிக்க முடியும். தமது வாக்கை புள்ளடிமூலம் இட்டபின்னர் வாக்காளர்கள் வாக்குச்சீட்டை மடித்து வாக்குச்சீட்டை வைக்கப்பட்டுள்ள பெட்டிகளில் போடவேண்டும்.
செய்தி நன்றி : வீரகேசரி
#சிகரம் #சிகரம்செய்திகள் #உள்ளூராட்சிதேர்தல்2018 #LGpollSL
No comments:
Post a Comment