Saturday 11 March 2017

தமிழ் மொழி - இன்றும் - நாளையும்! - 2

வணக்கம் தமிழே! நவீன தொழிநுட்பம் நமக்குத் தந்த வாட்ஸாப்பில் தமிழ் கூறும் நல்லுலகம் என்னும் அருமையான குழு ஒன்றுள்ளது. இங்கு தமிழ் மொழி குறித்து பல விடயங்கள் விரிவாக ஆராயப்படுகின்றன. இவ்வாரம் முதல் நாளொரு தலைப்பில் விவாதித்து வருகிறோம். அந்த வகையில் இன்றைய (05-06-07/03/2017) தலைப்பின் கீழான விவாதத் தொகுப்பின் இரண்டாம் பகுதி உங்களுக்காக இங்கே:
 
முதலாம் பகுதி:
 

இரண்டாம் பகுதி:

ஜெகஜோதி : குண்டு சட்டியில் குதிரை ஓட்ட வேண்டிய நிலையில் தமிழ் இல்லை. உலக அரங்குக்கு அதை எடுத்து செல்வது நம் பணி, நமது அரசின் பணி. தூய தமிழ் மற்றும் எளிய தமிழ் வேண்டும் . ஆனால் பிறமொழி கலந்துதான் தமிழ் மொழி நிலை நிறுத்தப் பட வேண்டுமா?.  உலக மொழிகளுக்கெல்லாம் தாய் எம் மொழி .

பாலகுமரன் : பிறமொழி கலந்து என்று பொதுவாகக் கருதாமல் ஆண்டாண்டு காலமாக எம் தமிழ் மக்களின் நாவில், வாழ்வில் உணர்வில் கலந்து விட்ட சொற்களைப் பாருங்கள்... எம் தமிழர் பேசி பழகிவிட்ட  சொற்களை ஏன் ஏற்றுக் கொள்ளத் தயக்கம்? எம் தமிழர் புரிந்து கொள்ள முடியாத சொல்லை பேசுவானேன் ? மொழியே நம் கருத்தைத் தெளிவாகக் கூறத்தானே... காபி என்பதே எல்லா தமிழருக்கும் புரியும்.. பலருக்கும் புரியாத குளம்பி என குழப்புவானேன்...?

உண்மையில் தொல்காப்பியமும் நன்னூலும் எனக்கு புரியவில்லை.. விதிகளே புரியாததை வைத்துக் கொண்டு எம் தமிழில் அனைத்தும் உண்டென பழம் பெருமை நமக்குள் மட்டும் தான் பேசலாம் .. அதுவும் இக்குழுவில் உள்ளவர் போன்ற சில தமிழ் அன்பர்களிடம் ....

ஜெகஜோதி : இருக்கட்டும் காப்பி போன்ற பெயர் சொற்களுக்கு மாற்று தேவையில்லை அய்யா. ஆனால் இரவு என்று அழகு தமிழ் வார்த்தை இருக்கும் போது ராத்திரி என்றும், உழவு, உழவன் என்று இருக்கும் போது விவசாயி தேவையா?. சரி என்று இருக்கும் போது ஓகே தேவையா? புதிய சொற்கள் தேவை. இருப்பினும் பழைய நற்சொற்கள் மக்களிடம் மீண்டும் வர வேண்டும். இதுவே எனது கருத்து.

பாலகுமரன் : விவசாயி தமிழ் இல்லை என எந்த ஆதாரங்களை வைத்துக் கூறுகிறீர்கள்? அப்படியெனில் தமிழர்களின் வழக்கில் இச்சொல் எப்படி வந்தது? பழந்தமிழ் நூல்களில் நாம் பேசியறியாத சொற்கள் பல உள்ளன. அது போலவே நாம் பேசி வரும் சொற்களும் பழந்தமிழ் நூல்களில் இல்லாமல் இருக்கலாம்.
 
பார்த்திபன் : உழவன் தான் தமிழ்ச்சொல்
 
வெற்றிவேல் : தாடை மயிர் - தாடி - இதற்கு இணையாக பிடரி மயிர் எனப் பயன்படுத்தலாம். ஆனால் மயிர் என்ற அழகான சொல் இன்று அறவறுக்கத்தக்க சொல்லாக மாறிவிட்டதே! 

பார்த்திபன் : Know your English என்று the Hindu வில் ஒரு பகுதி வரும். இதில் கடைசியில் modern day English users எப்படி பேசுகிறார்கள் என்பதும் சேர்ந்தே தான் வரும்.. அது போலவே தற்காலத் தமிழன் பேசி வரும் தமிழும் ஏற்கப்படத் தான் வேண்டும்.

ஜெகஜோதி : விவசாயி தமிழ் வார்த்தை இல்லை. செம்மொழி வழக்கு வாதத்தில் இந்த வார்த்தையை வைத்தே தமிழ் பிற மொழி உதவியோடு இயங்குவது  போல் வாதாடப்பட்டது. நீதிபதி அவர்கள் தமிழில் உழவன் எனும் வார்த்தை இருப்பதாக எடுத்து கூறினார். இது போன்ற ஆபத்து நேரும் என்று தான் பிறமொழி கலப்பு தேவை இல்லை என்று கூறுகிறேன்.
 
முனீஸ்வரன் : அடையாளப்பெயரை தமிழாக்கம் செய்ய தேவையில்லை. அது நன்றாக இருக்காது. ஆனால் பழகிவிட்டோம் என மொழி கலப்பை ஏற்க முடியாது. ஆங்கிலம் மற்ற மொழிகளோடு கலந்ததால் தான் உலகம் முழுவதும் பரவியது என்பது ஏற்புடையதாக தெரியவில்லை. இன்றைய ஆங்கிலத்தை பார்த்தாலே அது எவ்வாறு சிதைக்கப்படுகிறது என்பது புரியும். உதாரணமாக (sister-sis, aunty-ant, brother-bro,) இந்த நிலை தமிழிற்கு வரக்கூடாது என்பதற்காக தான் பிறமொழி கலக்காமல் பேச,எழுத கற்க வேண்டும். அடுத்து என்னை கேட்கலாம் பிறமொழி கலப்பு இல்லாமல் என்னால் பேச முடியுமா என...  உண்மையில் தற்போது என்னால் முடியாது. முயன்று வருகிறேன். 

சிகரம் பாரதி : தமிழுக்கு ஏற்ற சொற்களை தமிழோடு இணைத்துக்கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. மொழியானது நம் எண்ணங்களை வெளிப்படுத்த உதவியாக இருக்க வேண்டுமே தவிர உபத்திரவமாக இருக்கக் கூடாது.

முனீஸ்வரன் : செந்தமிழ் செப்ப வேண்டாம். பைந்தமிழ் பழகலாம். உண்மையில் பைந்தமிழின் பல சொற்கள், மற்ற மொழிகளில் இன்றும் பழக்கத்தில் உள்ளது. உதாரணம்(தெலுங்கு-செப்பு,மலையாளம்-நோக்கு) அவர்கள் வாழ்வியலோடு இந்த வார்த்தைகள் உள்ளது.

நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்
யாப்பினுள் அட்டிய நீர்.

வள்ளுவன்,கம்பன் தந்த வார்த்தைகள் தான் இவை.

ஆனால் அந்த வார்த்தையை தந்த நாம் அதை வழக்கொழித்துவிட்டோம். இதைப்போல் பழகிவிட்டோம் “மம்மி” என்று. அதனால் அதையும் தமிழாக அங்கீகரிக்க வேண்டும் என்று சொன்னால் ஏற்க முடியுமா?

முனீஸ்வரன் : மொழியை உபத்திரவமாக நாம் எண்ணாத வரை அப்படி இருக்காது. மழை உபத்திரவம் தான் உப்பு விற்பவனுக்கு. அது மழையின் குற்றமல்ல.

சிகரம் பாரதி : தமிழில் கலந்துள்ள பிறமொழி சொற்களை கண்டறிந்து அவற்றை ஆய்வுக்குட்படுத்தி அவசியமானவற்றை பயன்பாட்டுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். மழை இயற்கை. எல்லோருக்கும் பொதுவானது. மொழி செயற்கை. நமக்காக நாம் உருவாக்கிக் கொண்டது. அதில் தேவையான மாற்றங்களை உருவாக்குவதில் தவறில்லை.

விவாதம் தொடரும்...

1 comment:

  1. அருமையான கருத்தரங்கு ! நன்றி !

    ReplyDelete

Popular Posts