Monday 6 March 2017

தமிழ் மொழி - இன்றும் - நாளையும்! - 1

வணக்கம் தமிழே! நவீன தொழிநுட்பம் நமக்குத் தந்த வாட்ஸாப்பில் தமிழ் கூறும் நல்லுலகம் என்னும் அருமையான குழு ஒன்றுள்ளது. இங்கு தமிழ் மொழி குறித்து பல விடயங்கள் விரிவாக ஆராயப்படுகின்றன. இவ்வாரம் முதல் நாளொரு தலைப்பில் விவாதித்து வருகிறோம். அந்த வகையில் இன்றைய தலைப்பின் கீழான விவாதத்தின் தொகுப்பு உங்களுக்காக இங்கே:

தமிழ் கூறும் நல்லுலகம் திருவள்ளுவராண்டு 2048 மாசி மாதம் இருபத்தியோராம் நாள் விவாதத்திற்காக வழங்கப்படும் தலைப்பு : தமிழ் மொழி - இன்றும் - நாளையும்!

சிகரம் பாரதி : தமிழ்மொழியின் பழம்பெரும் பெருமைகள் பற்றி இன்று பேச வேண்டாம். தமிழ்மொழி இன்று எதிர்நோக்கும் சிக்கல்கள் மற்றும் அதற்காக எதிர்காலத்தில் நாம் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் மற்றும் எதிர்கால மென்பொருள் ஆளப்போகும் உலகில் தமிழின் வளர்ச்சிக்கு நாம் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆராய்வோம்.



பாலாஜி : 'உலகவழக்கழிந்தொழிந்து சிதையாத' தமிழின் சீரிளமைத் திறன் வியந்து செயல் மறந்து எத்தனைதான் நாம் போற்றி நின்றாலும்,  நமதருமைத் தமிழின் இன்றைய நிலைமையைத் தமிழராகிய நாமன்றி வேறு யார் சிந்திக்க இயலும்?  தமிழின் நிலையும் தரமும் என்றும் குறையாது என்பது உண்மை. எனினும் அத்தகைய பேறு பெற்ற தமிழ் தமிழராகிய நம் ஒவ்வொருவராலும்  எந்த அளவு வளர்க்கப் படுகிறது என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.  கல்வித் துறையில் தமிழ் எந்த அளவுக்குப் புகட்டப்படுகிறது?  மொழியை இன்னும் சரிவர உச்சரிக்கக் கூட இயலாத அளவில் எத்தனையோ பேரை நாம் காண்கிறோம்! சொற்பிழையும் எழுத்துப் பிழையும் இன்றி நமது மொழியை நாம் பயில வேண்டும். அதற்கு நாமே மனது வைத்தல் வேண்டும். நம்மால் ஆனவரை பிழையற்ற முறையில் எழுதக் கற்போம்;  கற்பிப்போம்!

சிவரஞ்சனி : மிகவும் சரி ஐயா. முயற்சியும் சரியான பயிற்சியும் இருந்தால் அனைத்தும் சாத்தியமே.

சிகரம் பாரதி : ஆட்சி, கல்வி, வேலை என அனைத்திலும் தமிழ் மொழி பயன்பாட்டுக்கு வர வேண்டும். ஆனால் எல்லாவற்றிலும் ஆங்கிலத்தையே நம்மவர்கள் முன்னிறுத்துகிறார்கள்.

ஜெகஜோதி : உண்மை அய்யா. ஒருவரை எப்படி இனம் காண்போம். பெயரை கொண்டல்லவா. ஆனால் இன்று தூய தமிழ் பெயர் குழந்தைகளுக்கு வைக்கப்படுகிறதா?. எதிலும் ஒரு தனித்தன்மை இருக்கும். அது தமிழுக்கு உண்டு. ஆனால் இன்றைய நவீன தமிழர்களுக்கு தனித்தன்மை என்பது சிறிதும் கிடையாது. இதே நிலை தொடர்ந்தால் விரைவில் வீழ்வோம்.

சிகரம் பாரதி : பிள்ளைகளுக்கு தமிழில் பெயர் வைப்பது அவமானம் என்று கருதுகிறார்கள். அல்லது உச்சரிக்கக் கடினமான தமிழ்ப்பெயர்களை எண்கணிதத்திற்காக வைத்துவிட்டு ஆங்கிலப் பெயர்களால் உறவாடுகின்றனர்.

சிவரஞ்சனி : நல்ல தமிழில் பெயர் வைத்தால் கேலி செய்கிறார்கள் 

பாலாஜி : அப்படி சில செயல்கள் சந்தர்ப்ப வசத்தால் நேரலாம். ஆனால் பேசும் பொழுதாவது பிழையின்றிப் பேசக் கற்றால் போதும்

ஜெகஜோதி : அது நம் தவறல்ல. நம்மால் நமது பெயரை வைக்க முடியாது.

சிகரம் பாரதி : அதற்காகவே நாம் அறிமுகப்படுத்தியுள்ள அரிய தயாரிப்பு....
புனை பெயர்....

ஜெகஜோதி : கிருத்துவர்கள் ஆங்கில பெயரையும், இந்துக்கள் சம்ஸ்கிருத பெயரையும், முகமதியர் அரபு பெயரையும் தூக்கி கொண்டு தமிழன் என்றொரு உணர்வை அழித்துக் கொண்டு இருக்கிறோம்.

பாலாஜி : பெயரை விடவும் பெரிய செயல்கள் உள்ளனவே. அவற்றில் கவனம் செலுத்துவோம்.                        

சிகரம் பாரதி : அடிப்படை சரியாக இருக்க வேண்டும். அவ்வளவே.

சிகரம் பாரதி : நம் தமிழ் ஊடகங்களைத் திருத்த வேண்டும். நிகழ்ச்சிகள் என்ற பெயரில் தமிழ்க்கொலை மிக சிறப்பாக நடந்து வருகிறது.

ஜெகஜோதி : என் தமிழினம் இந்த அளவுக்கு சொரணை கெட்டு பிற மொழி கலந்து பேசிக்கொண்டு திரிவதற்கு முதல் காரணம் தமிழ் சினிமா தான்

ஜெகஜோதி : தமிழ் தெரிந்த நபர் ஒருவருடன் தமிழில் உரையாடுவதை விடுத்து ஆங்கிலத்தில் உரையாடுவதே பெருமை என திரையில் காட்டியது. எம் ஜி ஆர் முதல் இன்று உள்ள நாடக தொடர்கள் வரை அப்படித்தான் சித்தரிக்கப்படுகிறது. ஆங்கிலம் கலந்து பேசினாலோ அல்லது ஆங்கிலத்தில் ஒருவன் பேசினாலோ அவனை மெத்த அறிவாளியாக காண்பித்து தாய் மொழியை இழி மொழியாக நினைக்க வைத்ததும் தமிழ் திரை உலகின் அளப்பரிய சாதனை.

பாலகுமரன் : தமிழ் இனி

இன்று காலை ஒரு நண்பர் தாடி தமிழ் இல்லை என்றார். ஆனால் அதற்கு இணையான தமிழ் சொல் என்னவென்று சொல்ல முடியவில்லை. அதனால் தாடி என்பதையே தமிழ் ஆக்கிவிட்டால் என்ன?
தனித் தமிழ் தூயதமிழ் என பழங்கதை பேசிக் கொண்டிராமல் நெடிய பழக்கத்தில் உள்ள சொற்களை தமிழ் என அறிவியுங்கள். பரவிய இடமெல்லாம் பாரம்பரிய அயல் மொழி சொற்களை ஏற்றுக் கொண்ட ஆங்கிலம் இன்று உலகெங்கும் பேசப்படுகிறது. நாம் இன்னும் குண்டு சட்டியில் குதிரை ஓட்டிக் கொண்டிருக்கிறோம். தமிழ் சொல்லகராதியை விரிவுபடுத்துங்கள். தமிழ் இலக்கண விதிகளை  எளிமைப் படுத்துங்கள். பிற மொழி சொற்களை சேர்த்தால் தவறு என்பவர்கள் சற்று யோசியுங்கள்... நாம் பெருமை பேசும் சோழனின் கல்வெட்டுக்களை அனைவராலும் படிக்க முடியுமா? 300_400 ஆண்டுகளுக்கு முன்னே எழுதப்பட்ட தமிழ் பாடலை பதவுரை இல்லாமல் புரிந்து கொள்ளத்தான் முடியுமா? அதுவும் தமிழ் தானே? இப்படியே போனால் 300-400 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் இருக்கும். ஆனால்  சொல்லும் பொருளும் எழுத்தும் மாறித் தான் போய் இருக்கும். நாமே அதை விதிப்படி சரியென்றே நெறிப்படுத்தினால் என்ன? உதாணமாக முடி நடை முறை சொல்லாகவும் மயிர் கெட்ட சொல்லாகவும் கூந்தல் வழக்கொழிந்த சொல்லாகவும் மாறித் தான் போய் இருக்கும்.


தூயதமிழ் பேசி தமிழ் பற்றை காட்டாமல் வாழ்க்கை மாற்றத்திற்கு ஏற்ப இப்படி மாறலாம். தமிழில் கையொப்பம் இடுங்கள். சுயகுறிப்புகளில், மாத வரவு செலவு கணக்குகளில், புதுப்புத்தகத்தில் முதல் பக்கத்தில் உங்கள் பெயர், புதுப்பேனாவின் முதல் எழுத்து சோதனைகளில் தமிழ் மட்டுமே பயன் படுத்துவோம்... முக்கியமாக நம் பிள்ளைகளுக்கு mummy Daddy uncle aunty ஆகியன கற்றுத் தராமல் இருப்போம்.

விவாதம் தொடரும்....

4 comments:

  1. அருமையான பதிவு. கருத்தரங்கில் கூறப்படுகின்ற கருத்துக்கள் தெளிவாகவே உள்ளன. இவற்றைத் தொகுத்தளிக்கும் உங்களுக்கு எமது சிறப்பான வாழ்த்துக்கள். நன்றி

    ReplyDelete
  2. அருமை ஐயா

    ReplyDelete
  3. மிக்க அருமை நண்பரே.அருமையான தொகுப்பு.இது எனது ஆசையே.எனக்கு கணிணியில் புலமை குறைவு.அதனால் என்னால் அடுத்தநிலைக்கு எடுத்துச்செல்ல இயலவில்லை.நீங்கள் அதை செய்தமக்ககாக வாழ்த்துக்களும்,பாராட்டுக்களும் உரித்தாகுக.

    வாழ்க வளமுடன்,
    வளர்க தமிழுடன்,

    நன்றி

    ReplyDelete
  4. அருமை தோழர்!!

    ReplyDelete

Popular Posts